
சென்னை: தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கமல்ஹாசன் எம்.பி. தெரிவித்தார். சுதந்திர தினம், ஜென்மாஷ்டமி விடுமுறையை தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது. இதையொட்டி, மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் எம்.பி., சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து நீண்ட நாட்களாக பேசிக்கொண்டு இருக்கிறேன். என் பேச்சுகளை முழுமையாக கவனிப்பவர்களுக்கு அது தெரியும். தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைகளை நாம் உடனடியாக பேசி சரிசெய்ய வேண்டும். இதுகுறித்து முதல்வரிடம் எடுத்துச் சொல்ல இருக்கிறோம்.