
சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை டி.ஆர்.சுந்தரம் 1937-ல் ஆரம்பித்தபோது, அதில் வேலைக்குச் சேர்ந்தார், நடிகையும் பாடகியுமான யு.ஆர்.ஜீவரத்தினம். அவருடைய திறமையைக் கண்ட டி.ஆர்.சுந்தரம், தனது முதல் படமான ‘சதி அகல்யா’வில் (1937) அவரை அறிமுகப்படுத்தினார். பிறகு, ‘சந்தான தேவன்’ (1937), ‘பக்த கவுரி’ (1941) ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடிக்க வைத்தார். அவர் பாடிய பாடல்கள் அப்போது மிகவும் பிரபலமானதை அடுத்து புகழ் பரவியது. அவர் அடுத்து முதன்மை வேடத்தில் நடித்த படம், ‘பூம்பாவை’.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரை, பூம்பாவை என்ற இளம்பெண் காதலித்ததாக நாட்டுப்புறக் கதை ஒன்று இருக்கிறது. அந்தக் கதையின் பின்னணியில் உருவான திரைப்படம் இது.