
திண்டிவனத்தில் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம், தனது தாய் சரஸ்வதியின் பிறந்தநாளைக் கொண்டாட தைலாபுரம் சென்றிருந்தார் அன்புமணி. அப்போது, அங்கே ராமதாஸையும் சந்தித்து இருந்தார் அன்புமணி.
ஆனால், ‘இருவருக்கும் இடையேயும் பேச்சுவார்த்தை நடந்ததா?’ என்பது தெரியவில்லை.
இந்த நிலையில், சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது…
“எங்களுடைய 36 தீர்மானங்கள் ஒரு சமுதாயத்திற்கானது மட்டுமல்ல… அது தமிழ்நாட்டின் அனைத்து சமுகத்திற்கானதும் ஆகும். எப்போதும் எங்களது தீர்மானங்கள் அப்படி தான் இருக்கும்.
தமிழ்நாட்டின் அனைத்து பிரச்னைக்கும் நான் குரல் கொடுத்திருக்கேன். எல்லா மக்களுக்கும் நான் பாடுபட்டு கொண்டிருக்கிறேன்.
அதிமுக ஆட்சியில் 10.5 சதவிகிதம் ஒதுக்கீடு, திமுக ஆட்சியில் பெற்ற 20 விழுக்காடு ஒதுக்கீடு ஆகியவற்றிற்கு எனக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தியிருக்க வேண்டும்.
ஆனால், என்னிடம் வருவதற்கு பதிலாக உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறீர்கள். நான் உங்களுக்காகவும் தான் போராடி வருகிறேன்.
எந்தக் கூட்டணி?
‘எந்தக் கூட்டணி?’ என்கிற ஆவல் இருக்கிறது.
கூட்டணி முடிவு எடுக்கும் அதிகாரத்தை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் விரும்புகிறவாறு கூட்டணி சிறப்பாக அமைக்கப்படும்.

10.5 சதவிகித ஒதுக்கீடு
10.5 சதவிகித ஒதுக்கீட்டை, இருக்கின்ற தகவல்களை வைத்துக்கொண்டு, ஒரே வாரத்தில் முதலமைச்சரால் கொடுத்துவிட முடியும். ஆனாலும், நீங்கள் மறுக்கிறீர்கள்.
மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முடியும் என்று தட்டிக்கழிக்கிறீர்கள். பிற மாநிலங்களைப் போல, நீங்களும் அந்தக் கணக்கெடுப்பை எடுக்கலாம். அதற்காக நாங்கள் கட்டாயம் போராடாமல் இருக்கமாட்டோம்”.