
இன்று அமெரிக்க அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் சந்திக்க இருக்கிறார்கள்.
ட்ரம்பின் நீண்ட நாள் குறிக்கோள்களில் ஒன்று, ‘ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்’ என்பது.
அதற்கான விடை இன்றைய சந்திப்பில் தெரிந்துவிடும்.
புதின் நிலைப்பாடு
இதுவரை புதின் இந்தப் போரை நிறுத்துவதற்கான எந்த அறிகுறியையும் காட்டியதில்லை.
உக்ரைன் தரப்பில், ‘உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் புதின் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்று எவ்வளவோ, முயற்சிகள் எடுத்தும், ரஷ்யா பக்கத்தில் இருந்து அதற்கு ‘ரெட் ஃபிளாக்’ தான்.
ஆரம்பத்தில், ட்ரம்புமே, ‘எனது நண்பர் புதின் நான் சொன்னால் போரை நிறுத்துவார்’ என்று கூறி வந்தார். ஆனால், இப்போது அவருக்கே தெரிந்துவிட்டது… புதின் யார் சொன்னாலும் கேட்கமாட்டார் என்பது.
அதனால், ட்ரம்ப் வரியைக் காட்டி பயமுறுத்த தொடங்கிவிட்டார்.
ட்ரம்ப் சாஃப்ட் கார்னர்
ஏப்ரல் 2-ம் தேதி, அமெரிக்கா வெளியிட்ட பரஸ்பர வரி பட்டியலிலும், சமீபத்தில் வெளியிடப்பட்ட பரஸ்பர வரி பட்டியலிலும் ரஷ்யாவின் பெயர் இடம்பெறவில்லை.
இதற்கு முக்கிய காரணம், ‘புதின் எப்படியாவது இறங்கி வந்துவிடுவார்’ என்கிற ட்ரம்பின் நம்பிக்கை தான்.
ஒருவேளை அவரது நம்பிக்கை பொய்த்துவிட்டால், ட்ரம்ப் கொஞ்சம் கூட யோசிக்காமல், நிச்சயம் ரஷ்யா மீது வரிகளைப் போட்டு தள்ளிவிடுவார்.
ஏற்கனவே, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது வரிகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, மிகவும் நெருக்கி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் வரி என்பது ரஷ்யாவை பெரிதும் தள்ளாட வைக்கும்.

பிற நாடுகளுமே…
புதினின் முடிவு ரஷ்யாவின் நிலையை மட்டுமல்ல, அந்த நாட்டுடன் வணிகம் செய்யும் பிற நாடுகளையுமே கடுமையாக தாக்கும்.
ஏற்கனவே, ரஷ்யா உடன் வணிகம் செய்கிறோம் என்று இந்தியா மற்றும் பிரேசில் மீது 50 சதவிகித வரியை விதித்து இருக்கிறது அமெரிக்க அரசு.
மேலும், அபராதம் வேறு உண்டு என்கிறார். ஆனால், அது எவ்வளவு என்று இன்னும் சொல்லப்படவில்லை.
சீனா மட்டும் விதிவிலக்கு
ஆனால், இதில் சீனாவை மட்டும் இன்னும் விதிவிலக்காக வைத்திருக்கிறார் ட்ரம்ப். காரணம், இரு நாடுகள் இடையேயும் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.
இந்தப் பேச்சுவார்த்தை முடிவில் இரு நாடுகளுக்கு இடையேயும் நல்ல வணிக முடிவு எடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
கம்ப்யூட்டர் சிப் இறக்குமதி, சோயா பீன்ஸ் ஏற்றுமதி என ஏகப்பட்ட கனவில் இருக்கிறார் ட்ரம்ப். ஆனால், இதற்கெல்லாம் சீனா ஒத்துழைக்குமா என்பது பெரிய கேள்வி.
சீனாவின் ப்ளஸ்
இன்னொரு பக்கம், அமெரிக்கா சீனா மீது வரி விதித்தப்போது, சீனா பரஸ்பர வரி விதித்ததற்கு முக்கிய காரணம், அமெரிக்கா சீனாவை பெரியளவில் நம்பியிருக்கிறது என்பது தான்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, அதனிடம் மூலப்பொருள்கள் இல்லை. அதை பிற நாடுகளிடம் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. அமெரிக்கா இறக்குமதி செய்யும் டாப் 5 நாடுகளில் சீனாவும் ஒன்று.

2024-ம் ஆண்டு, அமெரிக்கா 143.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருள்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது 2023-ம் ஆண்டை விட, 3.0 சதவிகிதம் குறைவாகும் ஆகும்.
2024-ம் ஆண்டு ஆண்டு அமெரிக்கா சீனாவில் இருந்து இறக்குமதி செய்த பொருள்களின் மதிப்பு 438.7 பில்லியன் டாலர்கள் ஆகும். இது 2.7 சதவிகிதம் உயர்வாகும்.
ஆக, இரு நாடுகளுக்கு இடையேயும் 295.5 பில்லியன் டாலர்கள் வர்த்தக பற்றாக்குறை இருக்கிறது.
இருந்தும், அமெரிக்கா சீனாவை நம்பியிருப்பது மேலே சொன்ன காரணத்திற்காகத் தான்.
சீனாவை எடுத்துகொண்டால், அதற்கு அமெரிக்கா மட்டும் சந்தை இல்லை. உலகமே சந்தை தான். அதனால், அவர்கள் ட்ரம்பின் வரிக்கு அதிகம் பொருட்படுத்தவில்லை.
இந்தியாவின் நிலை
இந்தியா பெரியளவில் இதுவரை அனைத்து நாடுகளுடனும் வணிகம் வைத்துகொள்ளவில்லை. அதனால், அமெரிக்காவின் வரியால் இந்தியா சற்று தடுமாறத் தான் செய்யும்.
உடனடியாக, வேறொரு நாட்டை இந்தியா தேடி கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. அதெல்லாம் கைக்கூடி வர குறைந்தது 6 – 12 மாதங்கள் ஆகும். அதுவரை, இந்திய தொழிற்சாலைகள் என்ன செய்யும்…

2024-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து அமெரிக்கா 87.3 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு இறக்குமதி செய்கிறது. இது 2023-ம் ஆண்டை விட, 4.5 சதவிகிதம் உயர்வாகும். அமெரிக்கா பொருள்கள் ஏற்றுமதி ஆகும் மதிப்பு 41.5 பில்லியன் டாலர்கள். இது 2023-ம் ஆண்டை விட, 3 சதவிகித உயர்வாகும்.
இரு நாடுகளுக்கு இடையேயும் 45.8 பில்லியன் டாலர்கள் வர்த்த பற்றாக்குறை உள்ளது. இது 2023-ம் ஆண்டை விட, 5.9 சதவிகிதம் உயர்வாகும்.
இந்தப் புள்ளிவிவரங்களில் இருந்தே இந்தியா எப்படி பாதிக்கப்படும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவின் ஜவுளித்துறையை சமீப காலமாக பெரிதும் நம்பியிருந்தது அமெரிக்கா. ஆனால், அதை தாண்டி இப்போது வங்காளதேசம், தாய்லாந்து, இந்தோனேசியா பக்கம் வண்டியைத் திருப்பி உள்ளது அமெரிக்கா.
இதனால், இந்தியாவில் குறிப்பாக திருப்பூர் பாதிக்கப்படும்.
எலெக்ட்ரானிக் பொருள்களும் இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துவருகிறது.
ஆனால், அமெரிக்காவின் இந்த வரியால் இந்தியா அதிகம் பாதிக்க வாய்ப்பில்லாத ஒரு துறை, அது ‘மருந்துகள்’. ஆனால், இப்போதைக்கு, ட்ரம்ப் அந்தத் துறைக்கு வரி விதிக்கவில்லை.
அப்படியே விதிக்கப்பட்டிருந்தாலும், இந்தியா எளிதாக வேறு சந்தையை தேடியிருக்கலாம். காரணம், இந்திய மருந்துகளுக்கு ஐரோப்ப நாடுகளிலும் மவுசு உண்டு.
ட்ரம்ப் – புதின் சந்திப்பு வெற்றிப்பெற்றால், இந்தியாவின் வரி தானாக 25 சதவிகிதத்திற்கு வந்துவிடும் மற்றும் அபராதம் ‘கட்’ ஆகிவிடும்.
இதனால், இந்தியாவின் சந்தை பாதிப்படையாமல் இருக்கும்.
அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியா பெரிதாக பாதிக்கப்படுமா என்றால் ‘இல்லை தான்’. ஆனால், அதன் தாக்கம் இந்திய சந்தையிலும், பொருளாதாரத்திலும் நிச்சயம் இருக்கும்.
‘பிரிக்ஸ்’ பிரச்னை
ட்ரம்ப் இந்தியாவிற்கு எதிராக இன்னொரு அஸ்திரத்தையும் கையில் வைத்திருக்கிறார். அது ‘பிரிக்ஸ்’. இது இந்தியாவை மட்டுமல்ல, சீனா, பிரேசில், ரஷ்யா என உலக தெற்கு நாடுகளைப் பாதிக்கும்.
இது குறித்தும் ட்ரம்ப் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.
ஒருவேளை, ரஷ்யா விஷயத்தில் இந்தியா, பிரேசில் தப்பித்தாலும், ‘பிரிக்ஸ்’ விஷயத்தில் எதாவது வரி விதிப்பார்.
பிரிக்ஸ் அமெரிக்காவிற்கு எதிராகவும், அமெரிக்க டாலர்களுக்கு எதிராகவும் எதாவது செய்யும் என்று ட்ரம்ப் நினைக்கிறார். அதனால், அது சம்பந்தமாக, அவர் என்ன நடவடிக்கைகள் வேண்டுமானாலும் எடுக்கலாம்.
அதனால், அந்த விஷயத்திலும், இந்தியா கொஞ்சம் கவனம் செலுத்த நேரிடும்.

அடுத்தடுத்த சந்திப்புகள்
இதை தாண்டி, ட்ரம்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், அடுத்தடுத்த சந்திப்புகளைப் பொறுத்து அமையும்.
சந்திப்பு என்றதும் அவருடனான சந்திப்பு இல்லை… இது உலக நாடுகளின் தலைவர்களுக்குள்ளான சந்திப்பு.
பிரேசிலின் துணை அதிபர் செப்டம்பர் மாதம் இந்தியா வருகிறார். புதின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருகிறார். இந்த மாதத்தின் இறுதியில் இந்திய பிரதமர் மோடி சீனா செல்கிறார்.
ஆக, ட்ரம்ப் டார்கெட் செய்யும் தலைவர்களின் சந்திப்பு அடுத்தடுத்து நடக்க உள்ளது. இதையடுத்து என்ன நடக்கும்… இந்தத் தலைவர்கள் அமெரிக்காவிற்கு எதிராக எதாவது நகர்வுகளை செய்வார்களா… இல்லை… ட்ரம்ப் செய்வாரா…
இன்று என்ன நடக்கும்… அதன்பிறகு உலகத்தில் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
இத்துடன், ஒருவேளை, ட்ரம்ப் பேசி புதின் போர் நிறுத்த முடிவிற்கு வந்துவிட்டால், ட்ரம்பின் நோபல் பரிசு கோரிக்கை இன்னும் வலுவடையும் என்பது எக்ஸ்ட்ரா செய்தி.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…