
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரும் மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும், அரசியல் சாசனத்தின் 370-வது சட்டப் பிரிவை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்தது. இதையடுத்து,அம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரி கல்வியாளர் ஜாஹூர் அகமது பட் மற்றும் சமூக அரசியல் ஆர்வலர் அகமது மாலிக் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.