• August 13, 2025
  • NewsEditor
  • 0

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பனி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இத்தகைய சூழலில், இப்போராட்டம் தொடர்பான பொதுநல வழக்கு ஒன்றில் போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களைக் கலைந்து செல்லும்படி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

மறுபக்கம், அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர் பாபு ஆகியோர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து போராட்டக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

மறுபக்கம், போராட்டக்காரர்களைக் களத்திலிருந்து அகற்ற போலீஸார் குவிக்கப்பட்டனர்.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், தூய்மைப் பணியாளர்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் பாரதி, “முடிந்தால் கைதுசெய்யட்டும். தமிழ்நாடு அரசுக்கும் மாநகராட்சிக்கும் ராமி ரெட்டி கான்ட்ராக்ட்தான் முக்கியமா?

அவர்களுக்காக எங்களைக் கைதுசெய்து ஜெயிலில் வைப்பேன் என்று சொன்னாலும், ராமி ரெட்டி உங்களுக்கு ஓட்டு போடல, ஓட்டு போட்டது நாங்கதான்னு சொல்லி களத்தில் நிற்போம்.

ஒருபோதும் நாங்கள் பின்வாங்கவோ, பயந்து கலைந்து போகவோ மாட்டோம்.

ஆயிரம் போலீஸாரை கொண்டு வந்து நீங்கள் தான் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

ராமி ரெட்டி தான் உங்களுக்கு முக்கியமா? காண்ட்ராக்டர்காக எங்க ஜனங்கள அடிச்சு அரெஸ்ட் பண்ணலாம்னு நினைப்பீங்களா?

எங்களுக்கு மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் எங்களைக் கைவிட மாட்டார்கள்.

இவ்வளவு நாள் பேச்சுவார்த்தைக்கு வராதவர்கள் இன்றைக்கு திடீரென்று எங்கள் மேல் என்ன அக்கறை?

நீதிமன்றத்தில் பேச எங்கள் தரப்புக்கு எந்த வாய்ப்பும் தரவில்லை. போலீஸ் இங்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தால், இங்குள்ள பெண் தொழிலாளிகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், சென்னை மாநகராட்சியின் ஆணையர், அமைச்சர் சேகர் பாபு, மேயர், துணை மேயர், காவல்துறை உயரதிகாரிகள்தான் பொறுப்பு.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

அமைதியாக ஓரமாகப் போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் மீது வழக்கு ஜோடித்து வெளியில் தள்ளுவேன் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

சமூகநீதி, சமத்துவ ஆட்சி என்று சொல்ல நீங்கள் வெட்கப்பட வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சி போர்டு எடுத்து விட்டு ராம்கி என்விரான்மென்டல் சொல்யூஷன் என்று பெயர் வைத்து விடுங்கள்.

எங்களிடம் இருந்தால் எந்த சலுகையும் இருக்காது, அவர்களிடம் சென்றால் எல்லா சலுகையும் கிடைக்கும் என்று வெட்கமே இல்லாமல் சொல்கிறீர்கள்.

தமிழ்நாடு முதல்வரின் தந்தை பராசக்தியில் எழுதிய வசனத்தைப் போல, எங்களை வாழ்க்கையின் எல்லைக்கு ஓட வைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

ராமி ரெட்டிக்காக, ராம்கிக்காக ஒருபோதும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். சுதந்திர தினத்திற்குள் எங்களைத் தூக்க வேண்டும் என்று பார்க்கிறீர்கள். நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.

எங்கள் போராட்டத்தை அரசு ஒருபோதும் ஒடுக்க முடியாது. பேச்சுவார்த்தையில் ராமி ரெட்டிக்கு சாதகமாக இல்லாமல், தொழிலாளர்களுக்கு சாதகமாக இருப்போம் என்று சொன்னால் நாங்கள் நல்ல முறையில் முடிவு எடுப்போம்.

போலீஸார்
போலீஸார்

இன்னொன்று முதல்வர் இதில் பேச வேண்டும். நேற்று பாரிஸ் வந்திருக்கிறார்.

அங்கு, `நான் பாதி கம்யூனிஸ்ட். அதனால்தான் என் பெயர் ஸ்டாலின்’ என்று சொல்லி இருக்கிறீர்கள்.

இடதுசாரி என்று நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்கள், ஆனால் இடதுசாரி என்றைக்குமே கார்ப்பரேட் முதலாளிகள் பக்கம் நின்றதில்லை உழைக்கும் மக்கள் பக்கம்தான் நிற்பார்கள்.

நிஜமாகவே நீங்கள் கம்யூனிஸ்ட் என்றால் பேச்சு வார்த்தைக்கு வாருங்கள். எங்கள் குறையைத் தீர்த்து வையுங்கள்.

எங்கள் தொழிலாளர்களுக்கு வேலையைக் கொடுங்கள். எங்கள் கோரிக்கையை முதல்வர் உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும்.

முதல்வரின் வாக்குறுதியாலும், கடிதததாலும்தான் நடுத்தெருவுல நிற்கிறோம். தயவுசெஞ்சு அடுத்தமுறை வாக்குறுதியோ, கடிதமோ கொடுக்காதீர்கள்” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *