
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் பதேபூரை அடுத்த பரூக்காபாத்திலும் தர்காவா? கோயிலா? என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. இரு தரப்பினர் நடத்திய போராட்டம் தொடர்பாக 145 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி.யின் பரூக்காபாத்தில் கைம்கஞ்ச் பகுதியில் ஷிவ்ராய் மத் எனும் கிராமம் உள்ளது. இங்கு கான் பகதூர் பாபா சைய்யத் என்பவரின் சமாதியுடன் ஒரு தர்கா உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்களுடன் இந்துக்களும் வந்து பாபா சைய்யத்தின் சமாதியை வழிபடுவது வழக்கம்.
இங்கு வருடந்தோறும் நடைபெறும் சந்தனக்கூடு விழாவிலும் இந்துக்கள் கலந்துகொண்டு மதநல்லிணக்கம் பேணி வந்தனர்.இந்நிலையில் இந்த தர்கா அங்கிருந்த ஒரு சிவன் கோயிலை இடித்துவிட்டு, கட்டப்பட்டதாக சமீபத்தில் ஒரு புகார் கிளம்பியது. இதையடுத்து கடந்த 1-ம் தேதி கடக்சிங் என்ற கிராமவாசி தர்காவினுள் நுழைந்து அங்கிருக்கும் சமாதியை சேதப்படுத்தினார்.