
சென்னை: சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின்கீழ் 3 வழித்தடங்களில் ரூ.63,246 கோடியில், 116.1 கி.மீ. தொலைவுக்கு பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. தொடர்ந்து, பூந்தமல்லி – பரந்தூர், கோயம்பேடு – ஆவடி என அடுத்தடுத்து, மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னையின் பிரதான பகுதியாக இருக்கும் தாம்பரம் – கிண்டி – வேளச்சேரி மற்றும்
கலங்கரை விளக்கம் – உயர் நீதிமன்றம் வரை மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிப்பு குறித்து தயாரிக்கப்பட்ட சாத்தியக்கூறு அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்ததால், அடுத்தகட்டமாக விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.