
திருச்சி: விருத்தாசலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மாடு மீது மோதியதில் வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது. சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு நேற்று முன்தினம் மாலை வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. விருத்தாசலத்தை அடுத்த மணலூர் அருகே சென்றபோது, திடீரென தண்டவாளத்தை கடக்க முயன்ற மாட்டின் மீது ரயில் மோதியது.
இதில், ரயிலின் ஏரோடைனமிக் (முன்) பகுதி சேதமடைந்தது. மாடும் அந்த இடத்திலேயே உயிரிழந்தது. இதனால், சுமார் 15 நிமிடங்கள் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்ததற்காக ரயில்வே சட்டம் 1989 பிரிவு 154-ன் கீழ் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மாட்டின் உரிமையாளரான மணலூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை கைது செய்தனர்.