தொன்றுதொட்டு வந்த தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தில் ஒன்றான தாம்பூலம் தரித்தல் தற்போது இனிப்புத்தூக்கலான பீடாவாக வலம் வருகிறது.
பீடா சாப்பிடலாமா; எந்த வெற்றிலை நல்லது; பாக்கு எவ்வாறு இருக்க வேண்டும்; பாக்கு திடீரென நெஞ்சை அடைக்குமா; குழந்தைகளுக்கு வெற்றிலையின் காம்பை ஏன் கொடுக்கிறார்கள்; பெண்கள் எப்போது தாம்பூலம் தரிக்கலாம்; தாம்பூலம் தரிப்பதினால் உண்டாகும் பயன்கள் ஆகியவைப்பற்றி சித்த மருத்துவர் செல்வ சண்முகம் அவர்கள் கூறுவதைக் கேட்போம்.
பொதுவாக, வெற்றிலை மெல்லியதாக இருக்க வேண்டும். வெற்றிலையை தாம்பூலத்திற்குப் பயன்படுத்தும்போது காம்பு, நடுநரம்பு, நுனியை நீக்கி பயன்படுத்துதல் வேண்டும். வெற்றிலையில் கற்பூர வெற்றிலை, கம்மாறு வெற்றிலை ஆகியவை ஆரோக்கிய பலன்கள் சற்றுக் கூடுதலானவை.
வெற்றிலையில் ஆன்டி ஸ்பாஸ்மோடிக் (Anti- Spasmodic) எனும் தன்மை இருப்பதால், சிறுவர்களுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு, வெற்றிலையில் விளக்கெண்ணெய் தடவி அதனை அனலில் வாட்டி வயிற்றில் வைப்பது வழக்கமாக உள்ளது.
மார்பில் சளி அதிகரித்து மூச்சுவிட சிரமமாக உள்ளபோது மார்பிலும் பக்கவாட்டு விலாப்பகுதிகளிலும் கற்பூராதி தைலத்தை தடவி அதன் மேல் வாட்டிய வெற்றிலையை கொண்டு ஒற்றடம் கொடுக்கலாம். வெற்றிலையை மென்று தின்றாலும் இப்பயனை பெற முடியும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீர் நாளத்தொற்று மற்றும் சளி போன்ற பிரச்னைகளில் வெற்றிலைச் சாறும் தேனும் கலந்து 2 முதல் 3 சொட்டுகள் கொடுத்து வர குணமாகும்.
ஒவ்வாமை பிரச்னைகளான மூக்கடைப்பு, தும்மல், மார்புச் சளி போன்றவற்றுக்கு வெற்றிலையுடன் துளசி, மிளகு முதலியவை சேர்த்துக் கொடுக்க நல்ல பலன் கிடைக்கும். இந்தக் கலவை நோய்த்தாக்கத்தை குறைப்பதுடன் மற்ற மருந்துகளின் வீரியத்தையும் அதிகப்படுத்துவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, காசநோய்க்கு பயன்படுத்தப்படும் ரிஃபார்ம்பைன் (Rifampin) எனும் மருந்தின் செயல்பாட்டை மிளகில் உள்ள வேதிப்பொருளான பைப்ரின் அதிகப்படுத்துவதாக ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.

சீவல், கும்பகோணம் கொட்டை பாக்கு போன்ற இயற்கை முறைகளில் விளைவித்த பாக்குகளாக இருக்க வேண்டும். செயற்கையாக இனிப்பு மற்றும் நிறமூட்டிகளை கலந்து விற்பனை செய்யப்படும் பாக்குகளை தவிர்ப்பது நல்லது.
பெரிய இரும்பு பாத்திரத்தில் கொட்டை பாக்கு சீவல், திப்பிலி, வால்மிளகு, மொட்டு நீக்கிய ஏலக்காய், கிராம்பு, சுக்கு முதலியவற்றைச் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் ஆரஞ்சு பழத்தோல்களை வெயிலில் காய வைத்து தயாரித்த பொடியையும் சேர்த்துக்கொள்ளலாம். இதை வெற்றிலையுடன் சேர்த்து போட வாய் மணக்கும். உடலுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

துவர்ப்பு சுவை மிகுந்த பாக்கினை தனியாக சாப்பிடும்போது அவை ரத்தக்குழாய்கள், உமிழ்நீர் சுரப்பிகள் முதலியவற்றை சுருக்கும். தவிர, செரிமான நீரில் வினைபுரிந்து அதிகமான காற்றை உற்பத்தி செய்யும். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நெஞ்சில் ஒருவித அழுத்தத்தைத் தருகின்றன. அதனால், பாக்கை தனியாக சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
அதிக அளவில் உணவை உட்கொள்ளும்போதும், செரிமானமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ளும்போதும் தாம்பூலம் தரிப்பது செரிமான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதற்குக் காரணம் அதில் சேர்க்கப்படும் சிப்பி சுண்ணாம்பே ஆகும்.

நடைமுறையில் பல்வேறு வகையான பீடாக்கள் இருக்கின்றன. இவற்றில் பல்வேறு வகையான ரசாயன பொருட்களும், வாசனைத் திரவியங்களும், நிறமூட்டிகளும் சேர்க்கப்படுகின்றன. இவை வெறுமனே சுவைக்காக மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றைத் தவிர்ப்பதே நல்லது.
முதலில் வெற்றிலையை மென்று உமிழ் நீரை சுரக்க செய்ய வேண்டும். பின்பு வெற்றிலையுடன் பக்குவம் செய்த பாக்குக் கலவையுடன் முத்துசிப்பி சுண்ணத்தையும் சேர்த்து மெல்ல வேண்டும். இவ்வாறு மெல்லும்போது முதல் மற்றும் இரண்டாவதாக சுரக்கும் உமிழ்நீரை துப்பிவிட வேண்டும். மூன்றாவதாக சுரக்கும் உமிழ்நீர் அமிர்தம். அதை விழுங்கிவிட வேண்டும். நான்காவதாக சுரக்கும் உமிழ் நீர் இனிப்பாக இருக்கும். அதையும் விழுங்கிவிட வேண்டும்.
இவ்வாறு உபயோகிக்கும் தாம்பூலத்தினால் செரிமானம், சீரான ரத்த ஓட்டம், மூளை ஆற்றல் அதிகரித்தல், விந்தணு எண்ணிக்கை அதிகரித்தல், தாம்பத்திய இன்பம் அதிகரித்தல், ஆண் பெண் தாம்பத்திய உறவில் சிறப்பாக செயல்படுதல் போன்ற நன்மைகள் ஏற்படும்.
காலை நேரத்தில் பாக்கை அதிக அளவில் பயன்படுத்துவதால் மலக்கட்டு, வயிற்றுக் குடல் பகுதியை சீர்படுத்துதல் போன்றவற்றிற்கு சிறந்ததாக அமையும். மதிய வேலைகளில் முத்து சிப்பி சுண்ணாம்பை அதிகமாக சேர்த்துக் கொள்வதால் செரிமானம் மற்றும் சீரண மண்டலத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்ய உதவும். இரவு நேரத்தில் வெற்றிலையை அதிகமாக கொள்வதினால் தாம்பத்திய இன்பம் அதிகரிக்கும்.
ஒரு நாளைக்கு ஒருமுறை எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும். அல்லது அதிக உணவுகளை உட்கொள்ளும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது குறைந்தபட்சம் வாரம் இருமுறையாவது பயன்படுத்தி பயன்பெறலாம்.
கருவுற்ற பெண்கள் மூன்றாம் டிரைமெஸ்டரில் தாம்பூலம் தரித்தால் செரிமானத்துக்கு நல்லது. பிள்ளைப் பெற்ற பின் உளுந்தக்கஞ்சி, பெருங்காய லேகியம் முதலியவற்றுடன் தாம்பூலமும் போடுவதினால் கருப்பை அழுக்கு நீங்கி இயல்பு நிலைக்கு சீக்கிரமாக திரும்ப உதவும். மாதவிடாய் நின்ற பிறகு தாம்பூலம் தரித்தால் இதிலிருக்கும் சுண்ணாம்புச்சத்து கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் ஆஸ்ட்ரோபோராசிஸ் (osteoporosis) எனும் எலும்பு வலுவிழத்தல் நோயை தவிர்ப்பதற்கான வாய்ப்பாக அமையும். மேலும் இம்மாதிரியான காலங்களில் அவர்களுக்கு ஏற்படும் பதற்றத்தைக் குறைத்து மன அமைதியை ஏற்படுத்தும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…