
சென்னை: கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக துணை நடிகர் மீது மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். நிகழ்ச்சி ஒன்றில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் பேசும்போது, ‘சனாதன தர்மம் பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு துணை நடிகர் ரவிச்சந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், சனாதன தர்மம் பற்றி பேசிய கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சித் துணை தலைவர் மவுரியா தலைமையில் கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரவிச்சந்திரன் மீது நேற்று புகார் மனு அளித்தனர்.