
சென்னை: டெல்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாகச் சென்ற ராகுல்காந்தி உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்ததைக் கண்டித்து, சென்னை சத்தியமூர்த்தி பவன் முன்பு மறியலில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
வாக்காளர் பட்டியலில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்திய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களையும், இண்டியா கூட்டணி தலைவர்களையும் டெல்லி காவல் துறை நேற்று கைது செய்தது. இதைக் கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவன் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.