
புதுடெல்லி: தற்போது டெல்லி துணை நிலை ஆளுநராக இருக்கும் வி.கே.சக்சேனா, 25 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் அரசு சாரா அமைப்பு ஒன்றின் தலைவராக இருந்தார். அப்போது நர்மதை பாதுகாப்பு இயக்கத்துக்கு அவர் அளித்த காசோலை, வங்கியில் கணக்கு இல்லாததால் திரும்பி விட்டதாக அதன் தலைவர் மேதா பட்கர் குற்றம் சாட்டினார். மேலும் சக்சேனாவை கோழை, தேசபக்தியற்றவர், ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுகிறார் என மேதா பட்கர் விமர்சனம் செய்தார்.
இது தொடர்பாக வி.கே.சக்சேனா தொடர்ந்த அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு விசாரணை நீதிமன்றம் 5 மாத சிறை தண்டனை விதித்தது. எனினும் சிறை தண்டனைக்கு பதிலாக நன்னடத்தைக்கான தகுதி காணுதல் அடிப்படையில் அவரை ஓராண்டில் விடுவிக்க கூடுதல் அமர்வு நீதிபதி உத்தரவிட்டார்.