
முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கரின் திடீர் பதவி விலகலுக்கு பின்னர் அவரது இருப்பிடம் குறித்து எம்.பி. கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ’லாபதா லேடீஸ்’ என்ற திரைப்படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் ‘லாபதா துணைக் குடியரசுத் தலைவர்’ என்று இதுவரை கேள்விப்படவில்லை” என்று எம்.பி. கபில் சிபல் குறிப்பிட்டிருக்கிறார்.
தன்கரின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்த கவலைகளைத் தணிக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரது இருப்பிடம் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
”ஜூலை 22 அன்று, துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் பதவி விலகினார். இன்று ஆகஸ்ட் 9, அன்றிலிருந்து அவரது இருப்பிடம் எங்களுக்கு தெரியவில்லை. அவர் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இல்லை. முதல் நாளில் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது செயலாளர் தொலைபேசியில் அவர் ஓய்வெடுப்பதாகக் கூறினார்” என்று சிபல் பி.டி.ஐ-க்கு தெரிவித்திருக்கிறார்.
சுயேச்சை எம்.பி.யான சிபல், “தனது அரசியல் தோழர்கள் பலரும் தன்கரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவரின் இருப்பிடம் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
”அவர் எங்காவது சிகிச்சை பெறுகிறாரா? அவரது குடும்பத்தினரும் எதுவும் கூறவில்லை. இதுபோன்ற விஷயங்களை வேறு நாடுகளில் தான் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் இந்தியா ஒரு ஜனநாயக நாடு, எனவே இதுபோன்ற தகவல்கள் பொதுவெளியில் இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

“தன்கர் என்னுடன் வழக்கறிஞராக இருந்து பல வழக்குகளில் வாதிட்டவர். நான் சென்று எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வது அழகாக இருக்காது. அவரிடமிருந்து, அவரது நண்பர்கள், குடும்பத்தினரிடமிருந்து எந்த செய்தியும் இல்லை..” எனவே உள்துறை அமைச்சகம் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவரின் இருப்பிடம் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று சிபில் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜூலை 21 அன்று, பருவமழைக் கூட்டத்தொடரின் முதல் நாளில், தன்கர் திடீரென துணைக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அளித்த பதவி விலகல் கடிதத்தில், உடல்நலக் காரணங்களால் உடனடியாக பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.