
டேராடூன்: உத்தராகண்ட் பெருவெள்ளத்தில் சிக்கிய 274 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். 9 ராணுவ வீரர்கள் உட்பட 59 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உத்தராகண்டில் கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் வழியில் தரளி கிராமம் அமைந்துள்ளது. இமயமலையில் சுமார் 10,200 அடி உயரத்தில் உள்ள இந்த கிராமத்தில் கடந்த 5-ம் தேதி மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டது.
கீர் கங்கா நதியில் கரைபுரண்ட வெள்ளத்தால் தரளி கிராமம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.ராணுவம், விமானப் படை, தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படைகள், மாநில காவல் துறை இணைந்து இரவு பகலாக தரளி கிராமத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளன. வெள்ள பாதிப்புகளால் ஆங்காங்கே சிக்கித் தவித்த 274 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். 9 ராணுவ வீரர்கள் உட்பட 59 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.