
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தொடர்பான விவாதங்களில் ஈடுபடாமல் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடுமானால், மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 21-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மாத காலத்தில் 21 அமர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டது. எனினும், முதல் நாள் முதல் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. ஆபரேஷன் சிந்தூர், பிஹார் எஸ்ஐஆர் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சிகள், அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு அவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.