
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்திநகர் பகுதியைச் சேரந்தவர் ஆறுமுகம் – கீதா தம்பதி. இவர்களுக்கு மணிகண்டன் , அமர்நாத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மணிகண்டனுக்கு சிறு வயதிலேயே ஏற்பட்ட உடல் மாற்றம் காரணமாக திருநங்கையாக மாறிய நிலையில் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 12 வருடங்களாக தென்காசி பகுதியில் திருநங்கைகளோடு வசித்து வருகிறார். மேலும் மணிகண்டன் தன்னுடைய பெயரை சமந்தா என்றும் மாற்றி கொண்டார். இதற்கிடையில் சமந்தா இன்ஸ்டாகிராமில் தனது ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்துள்ளார். இதை பார்த்த சமந்தாவின் தம்பி அமர்நாத் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து சமந்தாவின் தொலைபேசி எண்ணை பெற்று உள்ளார், இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக நல்ல முறையில் பேசி பழகி வந்துள்ளனர். சமந்தா தனது தம்பிக்கு பண உதவிகளும் செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்ஸ்டாகிராமில் அமர்நாத் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சமந்தாவின் வீடியோவை பார்த்துவிட்டு அமர்நாத்திடம் இது பற்றி கேட்டுள்ளனர். உறவினர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அமர்நாத் மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சமந்தா கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நத்தம் பகுதியில் நடந்த ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.
அப்போது அமர்நாத்தை தொடர்பு கொண்டு தான் நத்தம் வந்திருப்பதாகவும், சந்திக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்ட அமர்நாத் சந்திக்க சம்மதம் தெரிவித்ததோடு நேரில் சென்று சந்தித்துள்ளார். பின்னர் தனது தாய் தந்தையுடன் சேர்த்து வைப்பதாக கூறி நண்பர்களுடன் அழைத்துச் சென்ற அமர்நாத், நத்தம் பகுதியில் இருந்த ஒரு காட்டுப் பகுதிக்குச் கூட்டி சென்று திடீரென சமந்தாவை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சமந்தா மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அமர்நாத் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதையடுத்து சமந்தா தனக்கு தெரிந்தவர்களுக்கு போன் செய்து தன்னை மீட்கும்படி கூறியுள்ளார் சம்பந்தப்பட்ட திருநங்கையை சக திருநங்கைகள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் இது குறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தனது தம்பி மற்றும் உறவினர்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தன்னை கொடூர முறையில் தாக்கிய தம்பி அமர்நாத் மீது கடும் நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என திருநங்கை சம்மந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.