
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரளா அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இது தொடர்பாக உத்தரவுகளைப் பிறப்பிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்திருந்தது.
உச்ச நீதிமன்றம் விசாரணை
இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணை வந்தது. அதில், “முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான உபகரணங்களை தமிழக அரசு கொண்டு செல்வதற்கு ஏதுவாக சாலைகளைச் சீர்படுத்துதல், மரங்களை வெட்டும் பணிகள் போன்றவை எந்த நிலையில் இருக்கின்றன” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், “வல்லக்கடவு சாலையைச் சரிப்படுத்தும் பணிகள் தாமதமாவதற்கு பருவமழையைக் காரணம் காட்டி அவகாசம் கேட்கிறார்கள்” என்றார்.
முல்லைப் பெரியாறு கண்காணிப்புக் குழு
கேரளா அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பேசும் போது, “முல்லைப் பெரியாறு அணைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் சாலைகளைச் சீர்செய்யும் பணி மற்றும் மரங்களை அகற்றும் வேலைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதனால் கொஞ்சம் அவகாசம் தேவை இது பற்றி ஏற்கனவே தமிழக அரசு மற்றும் முல்லைப் பெரியாறு கண்காணிப்புக் குழுவிடம் தெரிவித்திருக்கிறோம்” என்றார்.

மத்திய அரசு நான்கு வாரத்தில் வழங்க வேண்டும்
இரு தரப்பினர் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “அணைப் பகுதிக்குச் செல்லும் சாலைகளைச் சரி செய்யும் பணிகளை பருவ மழை முடிந்தவுடன் கேரள அரசு விரைவாக முடிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்காக, மரம் வெட்டும் பணிகளுக்குத் தேவைப்படும் சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு நான்கு வாரத்தில் வழங்க வேண்டும்.
அணையைப் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு முன் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு அந்த அறிக்கையை கேரள அரசிடம், தமிழக அரசு வழங்க வேண்டும். அதற்குப் பிறகே அணையைப் பலப்படுத்தும் பணியை தமிழக அரசு தொடங்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.