
சென்னை: தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில், ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணி நடைபெறுகிறது. இங்கு பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம் அமைக்கும் பணி, பார்சல் அலுவலகக் கட்டிடப் பணி என பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. இதுதவிர, ரயில் நிலையத்தில் 1-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரை இணைக்கும் விதமாக, நடைமேம்பாலம் அமைப்பதற்காக ஆரம்பக் கட்டப்பணிகள் தொடங்கின.
இதற்காக, ரயில் நிலையத்தின் 1, 2-வது, நடைமேடைகள் ஜூன் முதல் வாரத்தில் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து, 3, 4-வது நடைமேடைகள் மூடப்பட்டன. இதன் காரணமாக, சென்னை எழும்பூர்- மதுரை இடையே இயக்கப்பட்ட தேஜஸ் விரைவு ரயில், மன்னார்குடிக்கு இயக்கப்பட்ட மன்னை விரைவு ரயில் உள்பட 6 ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றப்பட்டன.