
நேற்று முன்தினம், சில மணிநேர போர் இடைவேளையை அறிவித்தது இஸ்ரேல். இது காசா மக்கள் வெளியில் இருந்து வரும் உணவு மற்றும் உதவி பெறுவதற்கான இடைவேளை.
இந்த இடைவேளை முடிந்த, ஒரு சில நேரத்திலேயே 43 காசா மக்களைக் கொன்று குவித்துள்ளது இஸ்ரேல். இதில் 9 பேர் உணவு மற்றும் உதவிக்காக காத்திருந்தவர்கள் ஆவார்கள்.
60,000 உயிரிழப்புகள்
2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர். இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தப் போரில், இதுவரை 60,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று தரவுகள் கூறுகின்றன.
இந்த உயிரிழப்புகள் போரினால் மட்டும் ஏற்பட்டுவிடவில்லை. இதில் பலரும் உணவு இல்லாமலும், உதவி கிடைக்காமலும் இறந்தவர்களும் அடங்குவார்கள். இப்படி உணவு கிடைக்காமல், பாலஸ்தீனத்தில் 88 குழந்தைகள் உணவு இல்லாமல், பசியால் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஏன் இந்தப் பசிக்கொடுமை?
2022-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்தப் போரில் இஸ்ரேல், பாலஸ்தீனம் இரு நாடுகளும் மாறி மாறி போர் மற்றும் பணயக் கைதிகளைப் பிடித்து வைத்திருக்கிறது.
பாலஸ்தீனம் பிடித்து வைத்திருக்கும் பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் முதல் இஸ்ரேல் ஒரு கொடூரமான தந்திரத்தைச் செயல்படுத்தி வருகிறது.
அதாவது, பிற நாடுகளில் இருந்து பாலஸ்தீனத்திற்கு வரும் உதவியை, மக்களுக்கு செல்ல முடியாமல் தடுப்பது ஆகும்.

அப்படி மீறி செல்லும் உதவிகள், அங்கிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் பிரியும்போது, அனைவருக்கும் போதுமான உணவு கிடைத்துவிடுவதில்லை.
இதனால், பாலஸ்தீன மக்கள் பசியாலும், ஊட்டச்சத்து குறைப்பாடாலும் பாதிக்கப்பட்டுள்ளன.
சிலர், பசியால் இறந்தும் போகிறார்கள். இதில் இருந்து தப்பிக்க, சில மக்கள் தங்களது நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றிவிட்டனர், சென்று வருகின்றனர்.
ஐ.நாவின் எச்சரிக்கை
பாலஸ்தீனத்திற்கு உதவிக்காக செல்லும் ட்ரக்குகளின் எண்ணிக்கை வெறும் 73. இது நிச்சயம் லட்சக்கணக்கான பாலஸ்தீனிய மக்களுக்கு போதாது.
பாலஸ்தீனத்தில் இருக்கும் 20 லட்ச மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் பல நாள்களுக்கு உணவு இல்லாமல் இருந்து வருகின்றனர். அதனால், ஆயிரக்கணக்கான மக்கள் பஞ்சத்தில் வாழ்வதுப்போல இருந்து வருகிறார்கள்.

உணவு குறைப்பாடு நிலை தொடர்ந்தால், அங்கே பசி பேரழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.
இஸ்ரேலின் இந்தச் செயலுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து தான் வருகிறது. ஆனாலும், இஸ்ரேல் இறங்கி வந்தப்பாடில்லை.
இஸ்ரேல் மறுப்பு
அத்தனை அறிக்கைகள், வீடியோக்கள், புகைப்படங்கள் பாலஸ்தீன் மக்களின் பசியைக் காட்டினாலும், இதற்கு தாங்கள் காரணம் அல்ல என்று கூறி வருகிறது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.
ஆனால், அவரது உற்ற நண்பர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாலஸ்தீன மக்கள் பசியால் வாடுகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
பிரான்ஸ், சவுதி அரேபியா, இங்கிலாந்து…
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் கோரப் பிடியை தளர்த்த சில நாடுகள் புதிய அழுத்தம் ஒன்றை ஏற்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
அதன் படி, பிரான்ஸ், சவுதி அரேபியா பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்திருந்தது.
இந்த வரிசையில், நேற்று முதல் இங்கிலாந்தும் இணைந்துள்ளது.
இஸ்ரேல் போரை நிறுத்தவில்லை என்றால், வரும் செப்டம்பர் மாதம் முதல் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக இங்கிலாந்து அங்கீகரிக்கும் என்று அந்த நாட்டின் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவாக இங்கிலாந்தின் பங்கு மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுக்க பாலஸ்தீன மக்கள் மற்றும் குழந்தைகளின் பசி நிறைந்த புகைப்படங்கள் பேசுப்பொருளாகிறது.
இதனால், அனைத்து நாடுகளும், இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியிருக்கின்றன.
இதற்கு இஸ்ரேல் பணியுமா, பணியாதா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.