
பிரதமர் மோடியின் இரண்டு நாள் தமிழக பயணம் என்பது அரசு நிகழ்வுகளையொட்டியது என்றாலும் கூட, இடையிடையே அரசியல் தருணங்களையும் கவனிக்க முடிந்தது. முதல் நாள் இரவு, தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்துவைத்து, 4,900 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி.
மறுநாள், அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரமான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயம், திருவாசக தொகுப்பு நூலை அவர் வெளியிட்டார்.