
ஈரோடு: பவானிசாகர் அணை நீர் மட்டம் 100 அடியை எட்டிய நிலையில், அணையில் இருந்து பவானி ஆற்றில், 20 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்படுகிறது. இதையொட்டி, பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையில் 105 அடி வரை 32.8 டிஎம்சி நீரினைத் தேக்கி வைக்க முடியும். பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது தவிர பல்வேறு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடர் மழைபெய்து வருவதால், அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை எதிரொலியாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.