
கழுத்து வலி போய் திருகு வலி வந்த கதையாகிவிட்டது புதுக்கோட்டை மாநகர திமுக-வின் நிலை. புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளராக இருந்த செந்தில் திடீரென காலமானதை அடுத்து மாநகர் செயலாளர் பதவியை பிடிக்க பலரும் முட்டி மோதினார்கள். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில், ராஜேஷ் என்பவர் அமைச்சர் அன்பில் மகேஷ், எம்.எம்.அப்துல்லா (எக்ஸ் எம்பி) ஆகியோரின் ரூட்டைப் பிடித்து மாநகர் செயலாளராக வந்து உட்கார்ந்தார். ஆனால், அமைச்சர் நேரு மற்றும் புதுகை வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லபாண்டியனின் விசுவாசிகள் ராஜேஷை நிம்மதியாக உட்கார விடவில்லை. அவரை மாற்றியே தீரவேண்டும் என அறிவாலயம் வரைக்கும் போய் சத்தியாகிரகம் செய்தார்கள்.
தலைமையும் எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தது. ஆனால், அதையெல்லாம் அவர்கள் கேட்பதாக இல்லை. இதனால், புதுக்கோட்டை மாநகர திமுக-வை மூன்றாக பிரித்துவிடலாம் என யோசனை சொன்னார் அமைச்சர் நேரு. ஆனால், அதை ஏற்காத ஸ்டாலின், புதுக்கோட்டை மாநகர திமுக-வை வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரித்து மாநகர் தெற்கிற்கு பழையபடி ராஜேஷையே செயலாளராக அறிவித்துவிட்டு, வடக்கிற்கு துணை மேயரான லியாகத் அலியை செயலாளராக நியமித்தார்.