
வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக கடந்த ஒரு வருடத்தில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைக்கு உள்ளாகி இருக்கிறார் பண்ருட்டி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான சத்யா பன்னீர்செல்வம். ஆளும் கட்சி மட்டுமல்லாது சொந்தக் கட்சியினரும் சத்யாவின் வளர்ச்சியை ரசிக்கவில்லை. அதனால் தான் அவரை சுற்றிச் சுற்றி அடிக்கிறார்கள் என்கிறார்கள் சத்யாவின் ஆதரவாளர்கள்.
சத்யா பன்னீர்செல்வம் 2016-ல் பண்ருட்டி எம்எல்ஏ-வாக தேர்வான நாளில் இருந்தே அவருக்கும் கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரான முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் அவ்வளவாய் ஒத்துப்போகவில்லை. மணல் பிரச்சினையில் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு மல்லுக்கட்டாக மாறியதால் 2021 ஏப்ரலில் சத்யா பன்னீர்செல்வத்தைக் கட்சியிலிருந்தே நீக்கினார் இபிஎஸ். அப்போதே, “எம்.சி.சம்பத், (சிதம்பரம்) எம்எல்ஏ-வான பாண்டியன், சொரத்தூர் ராஜேந்திரன் ஆகியோரை நான் வணங்கும் சிவனும் ஜெயலலிதாவின் ஆன்மாவும் ஒருபோதும் மன்னிக்காது” என சாபம் விட்டார் சத்யா பன்னீர்செல்வம்.