
சமூக நீதி, வன்முறையில்லா வாழ்வு, வேலை, விவசாயம் மற்றும் உணவு, வளர்ச்சி, கல்வி உள்ளிட்ட 10 வகையான அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்து தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும், தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராமதாஸின் பிறந்த நாளான நேற்று (ஜூலை 25) தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தைத் தொடங்கப்போவதாக அன்புமணி அறிவித்தார்.
'உரிமை மீட்க… தலைமுறை காக்க' என்ற இலச்சினையையும், ‘ உரிமைப் பயணம் ’ என்ற தலைப்பில் பிரச்சார பாடலையும் அன்புமணி வெளியிட்டார். இதனையடுத்து இந்த நடைபயணத்தால் வடதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்றும், தனது அனுமதியின்றி பாமக பெயர், கொடியை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் மனு அளித்தார். எனினும், திட்டமிட்டபடி நேற்று திருப்போரூரில் நடைபயணத்தை தொடங்கினார் அன்புமணி. முருகன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.