
தமிழ்நாட்டின் கலை, கலாச்சார தலைநகரமாக மதுரை விளங்குகிறது. அண்மையில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட ஸ்வச் சர்வேக்ஷன் 2023 (Swachh Survekshan 2023) தூய்மைப் பட்டியலில் மதுரை மாநகரம் மதுரைக்கு 311-வது இடத்துக்கு தள்ளப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசியல் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மருத்துவர் அணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணன், “மத்திய அரசின் வீடு மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலுள்ள தூய்மையான நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதிமுக ஆட்சியில் சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்கள் பல்வேறு விருதுகளை பெற்றன. 2017-ல் இந்தியாவிலுள்ள தூய்மையான 10 புனித தலங்களில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் முதல் இடம் பெற்றது. இரண்டாவது முறையாக 2019 ஆம் ஆண்டும் முதலிடம் வந்தது.
சட்டமன்றத் தேர்தலின்போது மதுரை மாவட்டத்திற்காக பல்வேறு வாக்குறுதிகளை திமுகவினர் கொடுத்தனர். ஆனால், ஒன்றையும் நிறைவேற்றவில்லை.

தற்போது 2024-2025 க்கான இந்தியாவின் தூய்மை நகரங்களின் பட்டியலில் மதுரை மாநகராட்சி கடைசி இடத்தில் வந்துள்ளது மக்களை வேதனைப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே மதுரை மாநகராட்சியில்தான் ரூ.200 கோடிக்கு மேல் வரி முறைகேடும் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மொத்தத்தில் மதுரை மாநகராட்சி கமிஷன், கரப்ஷன், கலெக்சன் என்று சொல்லுமளவுக்கு உள்ளது. கோயில் மாநகரமான மதுரைக்கு அவப்பெயரை திமுக அரசு தந்துள்ளது. இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது” என்றார்.