
விவாகரத்து வழக்கு ஒன்றில் மனைவிக்கு சாதகமான மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கணவர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று (ஜூலை 22) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கைப் பொறுத்தவரை, இருவருக்கும் திருமணமாகி 18 மாதங்கள்கூட ஆகாத நிலையில் இருவரும் விவாகரத்து முடிவுக்கு சென்றிருப்பதால், கணவரிடமிருந்து தனக்கு ஜீனாம்சமாக ரூ. 12 கோடியும், பி.எம்.டபிள்யு காரும் வேண்டுமென்று மனைவி கோரிக்கை வைத்திருக்கிறார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “நீங்கள் நன்கு படித்திருக்கிறீர்கள். உங்களுக்காக நீங்கள் சம்பாதிக்க வேண்டும். உங்கள் திருமணம் 18 மாதங்கள் நீடித்தது.
இப்போது உங்களுக்கு பி.எம்.டபிள்யு காரும், மாதம் ஒரு கோடி ரூபாயும் வேண்டுமா?
எம்.பி.ஏ படித்து ஐ.டி துறையில் அனுபமிக்கவராக இருக்கும்போது நீங்கள் ஜீவனாம்சத்தை நம்பியிருக்கக் கூடாது.
படித்திருக்கும்போது உங்களுக்காக நீங்கள் யாசகம் கேட்கக் கூடாது. நீங்களே சம்பாதித்து சாப்பிட வேண்டும்.” என்றார்.
அப்போது, தனது கணவர் பணக்காரர் என்றும், தனக்கு ஸ்கிசோஃப்ரினியா (schizophrenia – mental disorder) இருப்பதாகக் கூறி திருமணத்தை ரத்து செய்யக் கூட முயன்றதாகவும் தெரிவித்த அந்தப் பெண், “நான் ஒரு ஸ்கிசோஃப்ரினியா நோயாளியைப் போல இருக்கிறேனா?” என்று கேட்டார்.
மறுபக்கம், கணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜீவனாம்சத்தை இவ்வளவு ஆடம்பரமாக கோர முடியாது.
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவரும் வேலைக்குச் செல்ல வேண்டும். எல்லாவற்றையும் இப்படிக் கேட்க முடியாது” என்றார்.

பின்னர், கணவரின் கடந்த கால வருமானம், ரூ. 2.5 கோடி சம்பளம் என்பதையும், பணியில் இருந்தபோது ரூ.1 கோடி போனஸ் ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார் என்பதையும் கவனித்த தலைமை நீதிபதி, இரு தரப்பினரும் முழுமையான நிதி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், கணவருடைய தந்தையின் சொத்தில் உரிமை கோர முடியாது என்று வலியுறுத்திய தலைமை நீதிபதி இரண்டு சாய்ஸ் கொடுத்தார்.
ஒன்று, அடுக்குமாடி குடியிருப்பைப் பெற்றுக்கொள்வது அல்லது ரூ. 4 கோடி பெற்றுக்கொள்வதுடன் புனே, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்களில் ஐ.டி வேலை தேடுவது.
பின்னர், இறுதி உத்தரவுக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.