
திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் (101) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். பின்தங்கிய மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவரும் கேரள அரசியலில் முக்கிய இடத்தை வகித்தவருமான வி.எஸ்.அச்சுதானந்தன், கடந்த 2019-ல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து பொது வாழ்க்கையில் இருந்து விலகினார்.
கடந்த 2021 ஜனவரியில் நிர்வாக சீர்திருத்த குழு தலைவர் பதவியில் இருந்து விலகினார். திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன், மகள் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 23-ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.