• July 21, 2025
  • NewsEditor
  • 0

மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி புறநகர் ரயில்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. பயணிகள் கூட்டம் அதிகமான மாலை 6.24 மணிக்கு தொடங்கி அடுத்த 10 நிமிடத்தில் மாட்டுங்கா, மாகிம், பாந்த்ரா, கார்ரோடு, ஜோகேஸ்வரி, பயந்தர், போரிவலி ஆகிய இடங்களில் 7 ரயில்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது.

பிரஸ்ஸர் குக்கரில் வைக்கப்பட்டு இருந்த குண்டுகள் வெடித்ததில் 189 பேர் உயிரிழந்தனர். அனைத்து வெடிகுண்டுகளும் முதல் வகுப்பு பெட்டியில் நடந்தது. குண்டு வெடிப்பில் மேலும் 800 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பு தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் 2015-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் 5 பேருக்கு மரண தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது. இத்தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு நீதிபதிகள் அனில், ஷியாம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் விடுவித்து உத்தரவிட்டனர். நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றத்தை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதை நம்ப முடியவில்லை. எனவே, அவர்களின் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. வேறு எந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேடப்படாவிட்டால், அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மகாராஷ்டிர ஒருங்கிணைந்த குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட பைசல் ஷேக், ஆசிப் கான், கமல் அன்சாரி, எஹ்தேஷாம் சித்துகி மற்றும் நவீத் கான் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது.

மேலும் ஏழு குற்றவாளிகளான முகமது சாஜித் அன்சாரி, முகமது அலி, டாக்டர் தன்வீர் அன்சாரி, மஜித் ஷாஃபி, முசம்மில் ஷேக், சோஹைல் ஷேக் மற்றும் ஜமீர் ஷேக் ஆகியோருக்கு குற்ற சதித்திட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பிற்குப் பிறகு 12 குற்றவாளிகளும் இப்போது விடுதலை செய்யப்படுவார்கள். இவ்வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கமல் அன்சாரி கொரோனா தொற்றின் போது உயிரிழந்துவிட்டார். இத்தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *