
புவனேஸ்வர்: ஒடிசாவின் புரி மாவட்டம், பாலங்கா அருகேயுள்ள பயாபர் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 மர்ம நபர்கள், சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
சிறுமியின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்ததும் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். பலத்த தீக்காயமடைந்த சிறுமியை மீட்ட கிராம மக்கள், பிப்பிலி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சுமார் 70 சதவீதம் தீக்காயம் அடைந்துள்ள அவரின் உடல்நிலை மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து நேற்று சிறப்பு ஆம்புலன்ஸ் விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.