• July 20, 2025
  • NewsEditor
  • 0

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடியாக மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

பின்னர் இரு தரப்பிலிருந்தும் மோதல் அதிகரிக்கவே பின் மோதல் நிறுத்தப்பட்டது.

Operation Sindoor – ஆபரேஷன் சிந்தூர்

மோதல் நிறுத்தப்பட்டது என முதலில் அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “வர்த்தகத்தை முன்வைத்து நான்தான் இந்த மோதலை நிறுத்தினேன்” என்று கூறிவருகிறார்.

ஆனால், மத்திய அரசோ இதனைத் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.

அதேசமயம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்தியா – பாகிஸ்தான் மோதலில் அமெரிக்காவின் தலையீட்டைக் குறிப்பிட்டு மத்திய அரசை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில், நாளை (ஜூலை 21) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியிருக்கும் சூழலில், ஆபரேஷன் சிந்தூர் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருக்கிறார்.

இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்துக்குப் பிறகு பேசிய கிரண் ரிஜிஜூ, “ஆபரேஷன் சிந்தூர் போன்ற முக்கியமான விஷயங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நாடாளுமன்ற அவையின் சரியான செயல்பாட்டை உறுதி செய்ய அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

ட்ரம்பின் கூற்று குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு நாங்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் சரியான முறையில் பதிலளிப்போம்” என்று கூறினார்.

மேலும், இந்த மழைக்கால கூட்டத்தொடரில் 17 மசோதாக்களை அரசு தாக்கல் செய்யவிருப்பதாகவும் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *