
புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக அரசின் ஊழல் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் புகார் தர காங்கிரஸ் குழு இவ்வாரம் நேரம் ஒதுக்க கோரியுள்ளது. இதையடுத்து ஓரிரு நாட்களில் டெல்லி செல்ல இக்குழு திட்டமிட்டுள்ளது.
புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்., – பா.ஜ.க, கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கூட்டணி அரசின் மீது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல், மதுபான தொழிற்சாலை அனுமதி வழங்குவதில் ஊழல், பொதுப்பணித் துறையில் 35 சதவீதம் கமிஷன், பத்திரம் பதிய லஞ்சம், முட்டை கொள்முதலில் ஊழல் என அடுக்கடுக்காக புகார் கூறி வருகிறார்.