
அதிமுக ஆட்சியில் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தமிழ்நாடு மாநில வங்கியின் தலைவராகவும் இருந்தவர் சேலம் ஆர்.இளங்கோவன். எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமாக சித்தரிக்கப்படும் இவர் மீது திமுக-வுக்கு எப்போதும் ஒரு கண் உண்டு. இந்தச் சூழலில், 2026-ல் இளங்கோவன் தான் போட்டியிடுவதற்கான தொகுதியை தயார்படுத்தி வருவதாக சேலம் அதிமுக வட்டாரத்தில் பலமான பேச்சு கிளம்பி இருக்கிறது.
2011 தொடங்கி கடந்த மூன்று தேர்தல்களாக சேலம் மாவட்டத்தில் அதிமுக கூட்டணி தான் பெருவாரியான வெற்றிகளை குவித்து வருகிறது. கடந்த முறை, மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே திமுக வென்றது. எஞ்சிய 10 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியதற்கு முழுமுதற் காரணம் எடப்பாடி பழனிசாமியும் சேலம் இளங்கோவனும் தான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இபிஎஸ் முதல்வரான போது அதன் பின்னணியில் இருந்து அனைத்து ‘செட்டில்மென்ட்’களையும் கவனித்துக் கொண்டவர் இளங்கோவன் தான்.