
மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி சுந்தரேசன், அமைச்சர் மெய்யநாதன் எஸ்காட்டிற்கு வேண்டும் என தன் வாகனத்தை வாங்கி கொண்டனர். அதன் பின்னர் வாகனத்தை தராததால் அவர் நடந்தே அலுவலகம் செல்வது போன்ற வீடியோ வெளியானது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டி.எஸ்.பி.சுந்தரேசன், என்னை பழி வாங்குகின்றனர் என்றும் செந்திவேலன், டேவிட் ஆசிர்வாதம், மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் குறித்து வெளிப்படையாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். இந்தவிவகாரம் காவல்துறை வட்டாரத்தில் சல சலப்பை கிளப்பியது. சுந்தரேசனுக்க்கு ஆதரவாக பெண் போலீஸ் ஒருவரும் பேசியிருந்தார்.
பேட்டி கொடுத்த அன்று மூன்று மணிக்கு சுந்தரேசன் ஜீப் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏற்கெனவே இருந்த டிரைவருக்கு பதில் வேறு டிரைவரை பணியில் அமர்த்தினர். இதைதொடர்ந்து சுந்தரேசன், முன்பு பல தவறுகளை செய்ததாக தகவல் பரவியது. உடனே, காவல்துறை ரெக்கார்டில் உள்ளவை எப்படி வெளியே கசிகிறது என்றும் என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை பரப்புகின்றனர் என்றும் சுந்தரேசன் கூறி வந்தார். இந்த நிலையில், தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி ஜியாவுல்ஹக், நேற்று மயிலாடுதுறை சென்று விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், சஸ்பெண்ட் செய்வதற்கு டி.ஐ.ஜி பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறையில் டி.ஐ.ஜி விசாரணை குறித்தும் சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட இருப்பது குறித்தும் தகவல் வெளியே கசிந்தது. இதையடுத்து, மயிலாடுதுறை எஸ்.பி அலுவலகத்தில் தலைமை காவலராக பணிபுரிந்த சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விசாரணை குறித்த தகவலை வெளியே கசிய செய்ததற்காக இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், டி.எஸ்.பி.சுந்தரேசன், என் உயிருக்கு ஆபத்துள்ளது. நான், மன அழுத்தத்தில் உள்ளேன், மற்ற போலீஸாரை போல் தவறான (தற்கொலை) முடிவை எடுக்க மாட்டேன் என செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது, என் மீது முந்தைய காலங்களில் நடந்த பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். அப்போது நான் தவறு செய்து இருந்தால் என்னை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால் என்னை டிரான்ஸ்பர் செய்தார்கள். ஒருவரை பிடிக்கவில்லை என்றால் கைப்பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் . இதுதான் காவலர்களின் நிலை.
ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு ஊதிய உயர்வு உண்டு. ஒன்பது மாதமாக எனது ஊதிய உயர்வை தடுக்கின்றனர். நான் நேர்மையான அதிகாரி. பல பிரச்னைகளை சந்தித்துள்ளேன். போலீஸ் உயர் அதிகாரிகள் நேர்மையான அதிகாரிகளை வேலை செய்ய விட மாட்டார்கள். குற்றச்சாட்டுகளை வைக்கத்தான் செய்வார்கள். என் மீது பாலியல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். ஆனால் தற்போது வரை ஏன் என்னை சஸ்பெண்ட் செய்யவில்லை. கடந்த 11 மாதமாக இரவு பகலாக நேர்மையாக வேலை செய்து வருகிறேன். தன்னை விசாரிக்காமல் எப்படி டிஐஜி சஸ்பென்ட் செய்வதற்கு பரிந்துரைக்கலாம். நான் அனைத்திற்கும் தயாராக உள்ளேன்.

மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தவறான தகவல் என தெரிவிக்கிறார். உங்களால் ஏதாவது பதில் சொல்ல முடிந்ததா, நான் ஓடி ஒளியவில்லை. நான் பதில் சொல்கிறேன். சஸ்பெண்ட் செய்திகளை பார்த்து சென்னையில் இருக்கும் எனது தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான மெசேஜ் மாவட்ட எஸ்பியிடம் தெரிவித்துள்ளேன். ஆனால் அவர் தற்போது வரை எனக்கு பதில் அளிக்கவில்லை. நான் குடும்பத்துடன் சென்னை சென்று எனது தந்தையை பார்க்க வேண்டும். இது தொடர்பான பிரச்சனை டிஐஜிக்கு தெரியும். ஆனால் தற்போது வரை என்னை விசாரிக்கவில்லை.
11 மாதம் நான் பணி செய்து வருகிறேன். ஆனால் இதுவரை என்னைப் பற்றி யாரும் புகார் அளிக்கவில்லை. நாமக்கல்லில் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கை விசாரணை செய்ததில் நானும் ஒருவன். அடுத்து விஜயகுமார் ஐபிஎஸ் இறந்தார். அவரிடம் நான் வேலை செய்ததில்லை ஆனால் அவர் தங்கம். தமிழக முதலமைச்சர் ஏன் இன்னும் எனது பிரச்சனையில் தலையிடவில்லை என எனக்கு தெரியவில்லை. தமிழக டிஜிபி ஏன் என்னை அழைத்து இன்னும் விசாரிக்கவில்லை எனவும் தெரியவில்லை. நான் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன்.

எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். சில பேரின் சுயநலத்தால் தான் எங்களை போன்ற அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தேவையானது நான் காவல்துறையில் பணியாற்ற கூடாது. எனக்கும் சட்டம் தெரியும். தற்போது நான் பேசுவதால் என்ன விளைவுகள் வரும் என்பதும் தெரியும். என் மீது சாணியை வாரி அடிக்கிறார்கள். எனது தந்தை உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார். அப்போதும் நான் இங்கு நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கிறேன். என் மீது தவறு இருந்தால் தூக்கில் போடவும். காவல்துறையில் ஸ்டார் முக்கியமில்லை. மன நிம்மதி மட்டுமே முக்கியம்.
எனது குடும்பத்திற்கு யார் பாதுகாப்பு. நான் இறந்து விட்டால் மலர் வளையம் வைத்து கண்ணீர் சிந்தி விட்டு சென்று விடுவீர்கள். நான் கடைசிவரை பிரச்னைகளை சந்திப்பேன். மற்ற காவலர்களை போன்று எவ்வித தவறான முடிவும் எடுக்க மாட்டேன்.
டிஜிபி சங்கர் ஜிவால் நல்ல அதிகாரி. ஆனால் தற்போது வரை என்னை கூப்பிட்டு விசாரிக்கவில்லை. மீண்டும் பதிவு செய்கிறேன். எனது உயிருக்கு உத்திரவாதம் இல்லை. தேசிய மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக எனது பிரச்னையில் தலையிட்டு விசாரிக்க வேண்டும். தமிழக முதல்வர் இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு நேரடியாக தலையிட வேண்டும்” என்றார்.