
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை’ (TRF) பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள அமெரிக்காவின் முடிவை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றுள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியா-அமெரிக்கா இடையிலான பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பின் வலுவான நடவடிக்கையான லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு மற்றும் உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்க அரசை பாராட்டுகிறேன். பயங்கரவாதத்திற்கு எந்த சகிப்புத்தன்மையும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.