
சென்னை: ‘தமிழகத்தில் ஆசிரியர்கள் எப்போ தெல்லாம் போராட்டம் நடத்தியிருக்கிறார்களோ, அப்போதெல்லாம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, சென்னையில் கடந்த 8-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 10-வது நாளான நேற்று டிபிஐ வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை, போலீஸார் கைது செய்து திருவல்லிக்கேணியில் உள்ள சமூகநலக்கூடத்தில் அடைத்து வைத்தனர்.