
சமீபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு லடாக், கோவா, ஹரியானாவுக்கு புதிய கவர்னர்களை நியமித்திருந்தார்.
இதில், ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கஜபதி ராஜு, கோவாவின் கவர்னராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் குறித்தத் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அசோக் கஜபதி ராஜு விஜயநகர பேரரசர் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் எந்த ஆடம்பரமும் இல்லாமல், எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
அவரது தந்தை பி.வி.ஜி.ராஜு, தன் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் கோவில்களுக்கு நன்கொடையாக அளித்திருக்கிறார்.
1982-ல் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த அசோக் கஜபதி ராஜு 6 முறை எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார்.
40 ஆண்டுகளுக்கும் மேல் தெலுங்கு தேசத்தில் அவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தன் அலுவலக வாயிலில், ‘அரசு பணி தவிர, மற்றவற்றுக்கு அனுமதி இல்லை’ என்ற பலகையும் அவர் வைத்திருந்திருக்கிறார்.
அந்தளவுக்கு நேர்மையை கடைப்பிடிப்பவர். அவர் அமைச்சராக இருந்த போது, அசோக் கஜபதி ராஜுவின் மகள் ஹைதராபாத்துக்கு வெளியே மருத்துவம் படித்திருக்கிறார்.

அப்போது கல்லுாரிக்கு தினமும் அரசு பஸ்சில் சென்று வந்திருக்கிறார். கடந்த 2014 – 19 வரை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், விமான போக்குவரத்து துறை அமைச்சராக அசோக் கஜபதி ராஜு பதவி வகித்திருக்கிறார்.
அந்த கால கட்டத்தில், அமைச்சருக்குரிய எந்த சிறப்பு சலுகையும் அவர் பயன்படுத்தியதில்லை. ரயில் நிலையங்களில் சாதாரண நபர் போல, பயணியருக்கான இருக்கையில் அமர்ந்திருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகி வருகின்றன.