
சிவகங்கை: போலீஸார் மற்றும் திமுகவினர் மூலம் அஜித்குமார் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் (29) போலீஸார் தாக்கியதில் கொல்லப்பட்டார். இதனிடையே போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அஜித்குமார் குடும்பத்தினரை மிரட்டி பேரம் பேசியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து ஏற்கெனவே அஜித்குமார் குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார், மடப்புரத்தில் தனியார் மண்டபங்களில் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் தனித்தனியாக திமுகவினர் மூலம் அஜித்குமார் குடும்பத்தினரை துன்புறுத்தி பேரம் பேசினர். அதனை சிலர் வீடியோவும் எடுத்துள்ளனர். அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்று கூறி இருந்தார்.