
‘திருடாதே’ படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் முதன்முதலில் நாயகியாக ஒப்பந்தமானார் அபிநய சரஸ்வதி சரோஜாதேவி, அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே தனது கனவுப்படமான ‘நாடோடி மன்னன்’ படத்தை முடித்து வெளியிடுவதில் எம்.ஜி.ஆர். தீவிரமாக இருந்தார்.
‘நாடோடி மன்னன்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிகை பானுமதி நடித்து வந்தார். அவர் சுதந்திரமாக செயல்படக் கூடியவர். எம்.ஜி.ஆரும் அப்படியே’. சில கருத்து வேறுபாடுகள் காரணமாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் இருந்து பாதியில் பானுமதி விலகிக் கொள்ள, நாயகியானார் சரோஜாதேவி. அவர் வரும் காட்சிகள் வண்ணத்தில் இருக்கும். நாயகியாக நடித்த முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாரான எம்.ஜி.ஆரின் ஜோடி. ‘நாடோடி மன்னன்’ பிரம்மாண்ட வெற்றி பெற சரோஜாதேவி உச்சத்துக்கு சென்றார். ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்றோருடன் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.