
சேலம்: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அரசு அதிகாரிகள் மூலம் வீடு வீடாகச் சென்று செல்போன் எண்களைப் பெற்று திமுக ஐடி- விங்குக்கு கொடுக்கப்படுகிறது, என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நெடுஞ்சாலை நகர் பகுதியில் புதிய கட்சி அலுவலகத்தை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தில், திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எழுச்சி மக்கள் மத்தியில் காண முடிகிறது.