• July 15, 2025
  • NewsEditor
  • 0

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை, கடந்த மாதம் 28 ஆம் தேதி திருட்டுப் புகாரில் தனிப்படை காவல்துறையினர் சட்டவிரோதக் காவலில் எடுத்து சித்திரவதை செய்து விசாரித்ததில் அஜித்குமார் உயிரிழந்தார்.

அஜித்குமார் கொலை வழக்கு

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் திருப்புவனம் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து தனிப்படையைச் சேர்ந்த 5 காவலர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மதுரை மாவட்ட நான்காவது கூடுதல் நீதிபதியை விசாரணை அதிகாரியாக நியமித்து, அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக திருப்புவனம் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று அஜித்குமார் குடும்பத்தினர், சாட்சியங்கள், காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உயர்நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் அஜித்குமார் கொலை வழக்கு, தமிழக அரசால் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சிபிஐ இயக்குநர் ஒரு வாரத்திற்குள் விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும், விசாரணை நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷின் அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளரிடமிருந்து பெற்று விசாரணையை தொடங்க வேண்டும் எனவும், ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், மதுரை, சிவகங்கை மாவட்ட நிர்வாகம், மற்றும் காவல்துறை தரப்பில் சிபிஐ விசாரணை அலுவலர்களுக்கான வாகன வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும், சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்” என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது.

சிபிஐ அதிகாரிகள்

அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.

நேற்று மதுரை வந்த சிபிஐ டிஎஸ்பி மோஹித்குமார் தலைமையிலான அதிகாரிகள் மதுரை சிபிஐ அலுவலகத்தில் அஜித்குமார் கொலை வழக்கு விசாரணை குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை அமர்விற்கு சென்று பதிவாளரிடமிருந்து விசாரணை அறிக்கையை பெற்றுக் கொண்டனர்.

பின்பு மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரை சந்தித்த சிபிஐ அதிகாரிகள், விசாரணைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து அஜித்குமார் கொலை வழக்கை விசாரிக்கும் பணியைத் தொடங்கினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *