
சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வருவாய் துறை செயலர் அமுதா, இத்திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: முதல்வர் தனி பிரிவில் (‘சிஎம் செல்’) பெறப்படும் மனுக்கள், அவரது பயணத்தின்போது மக்கள் தரும் மனுக்கள், அழைப்பு மையத்தில் பெறப்படும் கோரிக்கைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தீர்வு காணும் நோக்கில் ‘முதல்வரின் முகவரி துறை’ கடந்த 2021 நவம்பரில் தொடங்கப்பட்டது.
அதன்கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 1.05 கோடி மனுக்கள் பெறப்பட்டு, கடந்த ஜூன் 30 வரை 1.01 கோடி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த 2023-ல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் நகர பகுதிகளில் 9.05 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன.