
வயது என்பது வெறும் எண் தான் என தனது கடைசி நாட்கள்வரை நிரூபித்துக் காட்டியவர் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி. எப்போதும் பளிச்சென்ற அரிதாரம், அதிலும் குறிப்பாக ‘மை’ தீட்டப்பட்ட ஆயிரம் கதை பேசும் அந்தக் கண்கள், லிப்ஸ்டிக்கையும் தாண்டிய புன்னகையால் மிடுக்காக தெரியும் முகம் என்று வலம் வந்தார்.
பெயர், புகழ், பல உயரிய விருதுகள் என எல்லாம் சேர்ந்திருந்தாலும், ஒரு கலைஞனுக்கு தன்னால் முடியும் வரை கலையை நிகழ்த்திக் காட்டுவதில்தான் மிகப் பெரிய வெற்றியாக இருக்கும். ஒவ்வொரு நாள் கைதட்டும் கலைஞனுக்கு முதல் பாராட்டு போன்றுதான் இருக்கும். அந்த ஆத்ம திருப்திக்காக அண்மைக் காலம் வரை திரையில் வந்து கொண்டிருந்த சரோஜா தேவி திங்கள்கிழமை தனது 87 வயதில் மண்ணைவிட்டு மறைந்தார்.