
சென்னை: தேர்தல் வெற்றிக்கு அயராது பாடுபடுமாறு திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். மக்களின் கோரிக்கைகளைக் கேட்பதுபோல, திமுகவினரின் மனக்குரலை அறிந்து கொள்வதற்காக, ‘உடன்பிறப்பே வா’ எனும் தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் கடந்த ஜூன் 13-ம் தேதி முதல், சென்னையில் உள்ள திமுக தலைமையகத்தில் நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து முதல்வர் கருத்துகளை கேட்டறிந்து வருகிறார். இதுவரை 12 நாட்கள் நடைபெற்றுள்ள கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி, வட்டம், நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளை சந்தித்து, முதல்வர் கலந்துரையாடியுள்ளார். அப்போது நிர்வாகிகளுக்கு உற்சாகமூட்டி, புத்தகங்கள் வழங்கியதோடு, தொகுதி நிலவரங்கள் குறித்து கேட்டறிந்து வருகிறார்.