
2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர்.
அந்தவகையில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தமிழகம் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
“எனது சுற்றுப்பயணத்தில் மக்கள் மத்தியில் எழுச்சி இருப்பதைக் காண முடிகிறது. திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் தமிழக மக்கள் உள்ளனர். தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளன.
அதனால் மேலும் சில கட்சிகள் அதிமுக அணிக்கு வரும். ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பெயரில் முதல்-அமைச்சர் நாடகம் நடத்தி வருகிறார்.
மக்களின் செல்போன் எண்களை பெறுவதற்காக திட்டத்தை ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது. திமுகவால் மக்களுக்கு நன்மை இல்லை.
திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கு கொடுத்த இழப்பீடு ஏற்புடையதல்ல என செய்தி வெளியாகி இருக்கிறது.
2024-ம் ஆண்டு சங்கரன்கோவிலில் காவலில் இறந்த முருகனின் மனைவிற்கு இழப்பீடு இல்லை.

அரசு வேலை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டும் திமுக அரசு தரவில்லை என செய்திகளில் கூறப்படுகிறது.
லாக்கப் மரணங்களை தடுக்க முடியவில்லை. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு தர மனமில்லை.
மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி? 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும். அதிமுக கூட்டணி வலிமையாக, ஒற்றுமையாக இருக்கிறது.
தேர்தல் நேரத்தில் பலம் பொருந்திய கூட்டணியாக அதிமுக கூட்டணி அமையும்” என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.