• July 14, 2025
  • NewsEditor
  • 0

மதுரையில் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசும்போது, “முருகப்பெருமானின் முதல் படை வீட்டில் நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழாவிற்கு மாவட்டம் முழுக்க உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும், மதுரை மக்களின் வேண்டுகோள்தான் இது.

செல்லூர் ராஜூ

தமிழகம் முழுவதும் இன்று பேசு பொருளாக இருப்பவர் திருப்பரங்குன்றம் முருகன்தான். திருப்பரங்குன்றம் கோயிலில் திருமணம் நடைபெற்றால் மணமக்களுக்கு இடையே பிரிவினை ஏற்படாது.

அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று கூறியதற்கு ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி விரிவாக கருத்து சொல்லிவிட்டார். கூட்டணி குறித்தும் ஆட்சி அமைப்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே கூறிவிட்டார். தமிழக மக்களின் மனநிலை அறிந்து செயல்படக்கூடிய எடப்பாடி பழனிசாமியின் பயணம் மக்கள் வெள்ளத்தில் சென்று கொண்டிருக்கிறது.

கூட்டணி அமைப்பது, கூட்டணி ஆட்சி இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் என்ன சொல்கிறாரோ அதுதான் வேதவாக்கு, அதில் மாற்றுக் கருத்து கிடையாது. அவர் எல்லாம் அறிந்தவர், கூட்டணி ஆட்சியை பொருத்தவரை மக்களின் எண்ணம்தான் அதிமுகவின் எண்ணம். கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த யாரும் நினைக்கக் கூடாது.

மதுரை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத்தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது நிச்சயம், அதுதான் எங்களுடைய திட்டம், மீண்டும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் நடத்துகிறார் என்றால் இதுவரை மக்களுக்கு அவர் எதுவுமே செய்யவில்லையா? மக்களை சந்தியுங்கள் என முதலமைச்சர் சொல்கிறார் என்றால் மக்களின் பிரச்னைகளை இன்னும் ஆளும் திமுக அரசு தீர்க்கவில்லை என்றுதான் அர்த்தம்.

செல்லூர் ராஜூ – விஜய்

தேர்தல் வருவதால் ஒவ்வொரு கட்சியும் தங்கள் நிலைப்பாட்டையும், கருத்தையும் எடுத்துச் சொல்வார்கள், அதைப்போலதான் விஜய்யின் போராட்டமும், மக்களிடத்தில் பிரச்னைகளை எடுத்துச் சொல்லும் வகையில் விஜய்யும் போராட்டம் நடத்தியுள்ளார்.

மதுரை மக்கள் விவரமானவர்கள் என்பதால் மதுரை மண்ணை மிதித்தால் வெற்றி கிடைக்கும் என எல்லோரும் நினைக்கிறார்கள். தங்கள் கொள்கைகளை மதுரை மக்களிடத்தில் எடுத்துச் சொல்வதற்காக தம்பி விஜய் போன்றோர் மதுரையில் மாநாடுகளை நடத்த நினைக்கிறார்கள். இருந்தாலும் மக்களிடம் எழுச்சி இருந்தால்தான் வெற்றி கிடைக்கும், மக்களை அழைத்து வந்தால் அதில் பயனில்லை, மக்களாக விரும்பி வந்து தங்கள் தலைவனுக்கு கை அசைக்க வேண்டும், வாழ்த்துச் சொல்ல வேண்டும்” என்றவரிடம்,

“அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, ஆர்எஸ்எஸ் குறித்து விஜய் விமர்சிக்குறாரே?” என்ற கேள்விக்கு,

“ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை, நோக்கம் இருக்கும், விஜய் யாருடனாவது கூட்டணி வைத்தால்தான் தெரியும், ஆளும்கட்சி கூட்டணியில் உள்ள சிபிஎம்மே ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிக்கிறார்கள்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *