
விருதுநகர்: விருதுநகரில் சங்கக் கட்டிடத்தை நிர்வகிப்பது யார் என்பது தொடர்பாக அரசு ஊழியர் சங்கத்தினரிடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 44 பேரை போலீஸார் கைது செய்தனர். விருதுநகர் முத்துராமலிங்கம் தெருவில் 3,700 சதுர அடியில் கட்டிய அரசு ஊழியர் சங்கக் கட்டிடம் உள்ளது. கடந்த 2019-ல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் அன்பரசனுக்கும், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மாவட்டக் குழுவை மாநில குழு கலைத்தது.
இதை எதிர்த்து விருதுநகர் மாவட்ட சங்கம் தொடர்ந்த வழக்கில், மாவட்ட குழு கலைக்கப்பட்டது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2019 முதல் விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தை மாவட்ட நிர்வாகிகளே பராமரித்து வந்தனர். 2023ல் விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்துக்கு மாற்றாக, ‘தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்’ என்ற புதிய சங்கத்தைமாவட்டக் குழு நிர்வாகிகள் தொடங்கினர்.