• July 12, 2025
  • NewsEditor
  • 0

மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மாநிலம் முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகளுக்குக் கடன் வழங்கி வருகிறது. அதேசமயம் கடன் வாங்கி திரும்ப செலுத்ததாக சர்க்கரை ஆலைகளை வங்கி நிர்வாகம் பறிமுதல் செய்து, அதனை ஏலம் விட்டு கடன் தொகையை வசூலிக்கிறது.

இது போன்று மகாராஷ்டிரா அரசியல்வாதிகள் நடத்தும் சர்க்கரை ஆலைகள் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் 25,000 கோடி அளவுக்குக் கடன் வாங்கிவிட்டு, அதனைத் திரும்பச் செலுத்தாமல் வைத்திருந்தன.

அது போன்று கடன் வைத்திருந்த ஜரந்தேஷ்வர் சர்க்கரை ஆலையை தற்போதைய துணை முதல்வர் அஜித்பவார் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியிடமிருந்து மலிவு விலையில் ஏலத்தில் எடுத்தார். இந்தக் கூட்டுறவு வங்கியை முதலில் அஜித்பவார் குடும்பம்தான் நடத்தி வந்தது. சர்க்கரை ஆலை கடனைத் திரும்பச் செலுத்தாததால் அதனை வங்கி பறிமுதல் செய்தது.

அஜித்பவார்

அஜித்பவார் வேறு ஒரு நிறுவனத்தின் பெயரில் அதே சர்க்கரை ஆலையை மலிவு விலையில் ஏலத்தில் எடுத்துக்கொண்டார். இதன் மூலம் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிக்குக் கடுமையான இழப்பு ஏற்பட்டது.

இதே போன்று ஔரங்காபாத்தில் உள்ள கன்னாட் சஹாகாரி என்ற சர்க்கரை ஆலையை முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் பேரன் ரோஹித் பவார் ஏலத்தில் எடுத்தார். அவரும் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சர்க்கரை ஆலையைக் குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில் இது குறித்து விசாரிக்க மும்பை உயர்நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டது.

போலீஸார் நடத்திய விசாரணையில், அஜித்பவார் மற்றும் ரோஹித் பவார் ஆகியோருக்கு இந்தப் பணமோசடியில் தொடர்பு இல்லை என்று கூறி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அதோடு விசாரணையை முடித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் போலீஸார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் இதே பணமோசடி வழக்கை அமலாக்கப்பிரிவும் தனியாக விசாரித்து வந்தது.

மேலும் மும்பை உயர் நீதிமன்றத்திலும் இது தொடர்பாக அமலாக்கப்பிரிவு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் போலீஸார் இவ்வழக்கு விசாரணையை முடிக்க அனுமதி கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டிருந்தனர். இவ்விவகாரத்தில் மும்பை உயர் நீதிமன்றம் இன்னும் முடிவு செய்யவில்லை.

அதற்குள் அமலாக்கப்பிரிவு இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது. ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டே இவ்வழக்கில் இருந்து அஜித்பவார் பெயரை அமலாக்கப்பிரிவு நீக்கி விட்டது. அதே ஆண்டு அமலாக்கப்பிரிவு இதே வழக்கில் ஒரு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

அதில் அஜித்பவாரைச் சேர்க்கவில்லை. அஜித்பவார் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்று இருந்தும் அமலாக்கப்பிரிவு அவர் பெயரை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கவில்லை. இப்போது தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் குற்றப்பத்திரிகையில் ரோஹித்பவார் பெயர் மட்டும் இடம் பெற்று இருக்கிறது.

கடந்த ஆண்டு ஏற்கனவே இதே வழக்கில் ரோஹித்பவாரிடம் அமலாக்கப்பிரிவு வாக்குமூலம் வாங்கியது. அதோடு ஔரங்காபாத்தில் உள்ள ரூ.50 கோடி மதிப்புள்ள சர்க்கரை ஆலையையும் அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துள்ளது. இதில் 161 ஏக்கர் நிலமும் அடங்கும்.

தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பது குறித்து ரோஹித்பவார் கூறுகையில், ”பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் இவ்வழக்கில் இரண்டு முறை விசாரணையை முடித்துக்கொள்வதாக கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்திருக்கின்றனர். அதில் எனது பெயர் இடம்பெறவில்லை.

பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்தவர்களை விட்டுவிட்டு எஞ்சியவர்களைக் குறிவைத்து அமலாக்கப்பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்லாது அரசியல் நோக்கத்தோடு செய்யக்கூடியது.

இதனை எதிர்த்துப் போராடுவோம். இவ்விவகாரத்தில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மீது தவறு இல்லை. மேலிருந்து உத்தரவு கொடுக்கும் யாருக்கோ அவர்கள் பதில் சொல்லவேண்டியிருக்கிறது” என்று தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *