
சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 10 ஆயிரம் முகாம்களையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நகர்புறப் பகுதிகளில் 3,768, ஊரகப் பகுதிகளில் 6,232 என 10 ஆயிரம் முகாம்கள் நடைபெற உள்ளன.
அத்துடன் முகாம்களுக்கு வருகைதரும் பொதுமக்களின் உடல்நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.