
முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்திருக்கும் சம்பவம் இணையத்தில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி சார்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் கடந்த 2022-ம் ஆண்டு அந்நாட்டு பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு ரிஷி சுனக் தலைமையில் பொதுத் தேர்தலை சந்தித்த கன்சர்வேடிவ் கட்சி தோல்வியைச் சந்தித்தது. தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதே நேரத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற ரிஷி சுனக் எம்பியாக தற்போது தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் ரிஷி சுனக் ஆரம்பக் காலத்தில் பணிப்புரிந்த அமெரிக்காவைச் சேர்ந்த Goldman Sachs என்ற நிதி நிறுவனம் ஒன்றில் மீண்டும் பணிக்கு சேர்ந்திருக்கிறார்.
2000ம் ஆண்டு Goldman Sachs நிறுவனத்தில் தொடக்க நிலை பணியாளராகச் சேர்ந்து, அங்கு மொத்தமாக 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். உலகெங்கும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் சீனியர் ஆலோசகராக அந்நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார்.

இந்த நிறுவனத்தில் இருந்து தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் அவர் ‘தி ரிச்மண்ட் திட்டம்’ என்ற அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரிஷி சுனக்கின் மாமனார் இன்போசிஸ் நாராயண மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.